செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

தேசியக் கல்விக் கொள்கை - தொடர்ச்சி

தகவல் தொழில் நுட்பம் :

*  ICT ( Information, Communication, Technology ) துறைகளில் ஏற்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கல்வி கற்ப்பிக்கும் முறை மாறவேண்டும். இதன் முதல்படியாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.


நிதி ஒதுக்கீடு : 

*  தேசிய வருவாயில் 6% கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். தொழில் சார்கல்விக்கும், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்கான கல்விக்கான ஒதுக்கீடு என்பது தனியாக இருக்கவேண்டும்.

மொழிக் கொள்கை :

ஆரம்பநிலைக் கல்வி ( ஐந்தாம் வகுப்பு வரை ) தாய்மொழியிலேயே இருக்கவேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழியைப் பயிலுவது என்பது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

உடல் பயிற்சி மற்றும் யோகா : 

இந்திய அளவில் பெரும்பாலான பள்ளிகளில் உடல்பயிற்சிக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. உடல்பயிற்சிக்கான முன்னெடுப்பை கல்விநிலையங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

யோகா என்பது உலகிற்கு இந்தியாவின் கொடை.  கல்விக்கூடங்கள்  தொடக்கநிலை யோகா பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க முன்வரவேண்டும்.

தேர்வு சீர்திருத்தங்கள் : 

இன்றய கல்விமுறை மாணவர்களின் மனப்பாடம் செய்யும் தகுதியை மட்டுமே தேர்வு செய்வதாக இருக்கிறது. இது தேவையற்ற சுமையை மாணவர்கள்மீது திணிக்கிறது. கற்பது என்பது மாணவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இருக்கவேண்டும், ஆனால்  நிலை அப்படி இல்லை. புத்தகங்களின் சுமையைக் குறைக்கவும், மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதையும் நாம் மாற்றவேண்டும்.

மனப்பாடம் செய்யும் முறையால் மாணவர்கள் தனிப்பயிற்சிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் முதல் தலைமுறையில் கல்விகற்பவர்களுக்கு, தனிப்பயிற்சி எடுக்கும் மாணவர்களோடு போட்டி இடுவது இயலாத ஒன்றாக இருக்கிறது.

மேலும் மனப்பாடம் செய்து 98% மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெறுகின்ற மாணவர்களில் பலர் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற முடியாத நிலையும் இருக்கிறது. ஆண்டு இறுதியில் நடைபெறும் தேர்வு தேவையற்ற மனச்சுமையை மாணவர்கள்மீது திணிக்கிறது.

எனவே மாணவர்கள் தொடர்ச்சியான மதிப்பீடுமூலமாக மதிப்பிடப்பட வேண்டும். கற்றல் என்பது புத்தகங்களைத் தாண்டியும் இருப்பதுபோல மாற்றப்படவேண்டும். வெறும் மனப்பாடம் செய்தும் திறனைத்தாண்டி மாணவர்களின் புரிதலே அளவிடப்படவேண்டும்.

ஆண்டு இறுதியில் ஒரேமுறை நடைபெறும் தேர்வு என்பதற்குப் பதில்   10 மற்றும் 12 வகுப்புக்கான பள்ளி இறுதி தேர்வுகள் ஆண்டில் எந்த நாட்களில் வேண்டுமானாலும் கணினிமுறையில் நடத்தமுடியுமா என்பதை நாம் பரிசீலிக்கவேண்டும்.

12ஆம் வகுப்பிற்குப் பிறகு அகில இந்திய அளவில் தகுதித்தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், தொழில் கல்விக்கு பல்வேறு நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதும் சுமையைக் குறைக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றங்கள் : 

கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில்தான் மிக அதிகமான மாணவர்கள் தேர்ச்சி அடைவதில்லை. அதனால் பத்தாம் வகுப்பிற்குப் பின் தொழிற்கல்வி பயில விரும்பும் மாணவர்களும், மேல்நிலை வகுப்பில் இந்த இரண்டு பாடங்களை பயில விரும்பாத மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும் வரையில் இந்த இரண்டு பாடங்களும் இரண்டு நிலைகளில் தேர்வு வைக்கலாம்.

எல்லா மாணவர்களுக்கும் பாடத்திட்டம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் மேல்நிலைப்பாடங்களில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு கடினமான தேர்வும், இந்தப்பாடங்களைப் பயிலத் தேவையில்லாத மாணவர்களுக்கு எளிதான தேர்வும் என்று மாற்றப்படலாம்.

மாணவர்களும் ஆரோக்கியமும் :

இன்றய நிலையில் இந்தியக் குழந்தைகளில் 62% வைட்டமின் A குறைபாட்டோடு இருக்கிறார்கள். 31% குழந்தைகள்  ஐயோடின் குறைபாட்டோடு இருக்கிறார்கள். 44% குழந்தைகள் இரவு உணவின்றி இருக்கிறார்கள். இந்த நிலையை இன்னும் சகித்துக்கொண்டு இருக்கக் கூடாது.

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யும் வசதியோடு கூடிய ஊர்திகள் உருவாக்கப்படவேண்டும். அவை எல்லா மாணவர்களின் உடல்நலத்தையும் பரிசோதித்து தேவையான மருத்துவச் சிகிச்சைகளை செய்யவேண்டும்.

மதிய உணவுத் திட்டம் : 

இந்தியாவில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்கப்படவேண்டும். இதோடு மாணவர்களுக்கான வைட்டமின் மாத்திரைகள் போன்ற மருத்துவ உதவியும் செயல்படுத்தப்பட வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய வித்யாலயா :

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதய வித்யாலயாக்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. இந்தப் பள்ளிகளின் தரத்திற்கு எல்லா அரசுப்பள்ளிகளையும் உயர்த்தும் திட்டம் தொடங்கப்படவேண்டும்.

இவை ஆரம்ப மற்றும் மேல்நிலைக் கல்விக்கான ஆலோசனைகள்.