சனி, 20 பிப்ரவரி, 2016

நண்பரிடம் சில கேள்விகள்

எனது கெழுதகை நண்பரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடமாநிலத் தளகர்த்தர்களில் ஒருவரும், தனியார் பொறியியல் கல்லூரித் தலைவருமான ஒருவர் தனது நிலைத் தகவலில் இவ்வாறு பகிர்ந்து இருந்தார்.


// தேசபக்தி
1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது.
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.
இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.
இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்.
ஒரு அரசியல் அமைப்பின் மீது யாருக்கும், எந்தக் கருத்தும் இருக்கலாம்! ஆனால், அதன் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்புவது என்பது, அந்தக் கட்சியை அங்கீகரித்து இந்த ஜனநாயகத்தில் இடமளிக்கும் நம் அரசியல் அமைப்பின் மீது கேள்வி எழுப்புவது ஆகும். இதை, நாம் எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளவே கூடாது.
எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.
எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.
நான் எப்போதுமே சொல்வதுதான்!
சரித்திரம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
அது ஈவிரக்கமற்றது.//

நண்பருக்கு என் கேள்விகள் 

 // 1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது. 
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.//

இது தேசபக்தி பற்றிய உங்கள் வரையறை, நல்லது இதன்படி இந்த நாடு துண்டாடப்பட வேண்டும் என்று கோஷம் எழுப்புவது மற்றும் அரசியலமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்கள் கூடி இருந்த நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவது, அந்தக் குற்றத்தை நிருபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்த நீதிமன்றத்தை அவதூறு செய்வது இதில் அடங்காது அல்லவா, இல்லை கருத்துரிமை என்ற பெயரால் இதனை அனுமதிப்பது பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன ? 

// இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.//
நல்லது, இதுவரை உங்கள் தேசபக்தியை யாரும் கேள்வி கேட்கவில்லை, இனியும் கேட்காத அளவில் நம் ( எல்லோரின் ) நடத்தையும் இருக்கட்டும். 

//இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்போம், இதுதான் நமது வழிமுறை நண்பரே. 

// இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்//

மிகத் தவறான புரிதல், எந்த சாதாரண இஸ்லாமியர் மீதும் இப்படிக் குற்றச்சாட்டு சூட்டப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மதத்தின் பின்னும், ஜாதியின் பின்னும் ஒளிந்துகொண்டு தாங்கள் அதனாலே பழிவாங்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இன்று இந்த தேசத்தில் எந்த  இஸ்லாமியரும்  முதல் குடிமகன் என்ற அளவு வரை உயர்ந்து இருக்க முடியாது. இந்த நாட்டின் எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஆளுநர்கள், எத்தனை ராணுவத் தளபதிகள், எத்தனை உயர்நீதிமன்ற / உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற பொறுப்புகளை வகித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அல்ல, அவர்களின் தகுதியால், திறமையால் இந்தப் பதவிகளை அலங்கரித்து உள்ளனர். இன்னும் இதுபோன்ற பதவிகளுக்கு பலப்பல இஸ்லாமிய சகோதரர்கள் வருவார்கள், தங்கள் பங்களிப்பை இந்த நாட்டுக்குத் தருவார்கள்.

உதாரணமாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக திரு அசாருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர் திறமையால். ஆனால் கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டு அவர் மீது நிருபிக்கப்பட்டபோது தான் இஸ்லாமியர் என்பதால் பழிவாங்கப்பட்டேன் என்ற அவரது பேச்சை இந்த நாட்டின் இஸ்லாமியர்கள் யாரும் ஏற்கவில்லை. ஆனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என்பது வரலாறு.

ஆக இல்லாததையும் பொல்லாததையும் கூறி இந்த மண்ணின் மக்களைப் பிரித்துவிடாதீர்கள் நண்பரே. 

// இப்போது, அந்தக் கொடிய கரங்கள் கம்யூனிஸ்டுகள் மீதும் நீண்டிருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி மீது இந்தோ-சீனப் போரின் போது கேள்வி எழுப்பியவர்கள் கூட பின்னாளில் ஒவ்வொருவராக அதற்கு வருத்தம் தெரிவித்தது வரலாறு.//
கேள்வி எழுப்புவதே தவறு அல்ல நண்பரே, சீனப் போரின் போது நடந்தவைகளைச் சற்றே படித்துப் பாருங்கள். 

// எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.//

இது உங்கள் கருத்து, இதை வெளிப்படையாகச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு. 

//எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.//

 நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் நூறு நிரபராதி தப்பிக்கப்படலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற முறையில்  நடைபெறுபவை. சட்டத்திற்கு தேவை சாட்சிகள், முழுமையான ஆதாரங்கள். " சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்"  என்ற வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

சட்டத்தின்படி சரி என்பதற்கும் - தர்மத்தின்படி / அறநெறிகளின் படி சரி என்பதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

ஒரு அரசு தான் தொடுத்த வழக்கில் வெற்றியடையவில்லை என்றால் அந்த அரசின் பிரதமர் அதற்குப் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி அரசு தான் தொடுத்த எல்லா வழக்கிலும் வெற்றி அடைந்துவிட்டதா ? அப்படி இல்லாத நிலையில் உங்கள் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்தவர் எந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பதைத் தெளிவு படுத்த முடியுமா ? 

நீங்கள் எடுத்த நிலைப்பாட்டையே இன்றைய பிரதமர் எடுக்கலாம் அல்லவா ? கோபாலபுரம் கைகாட்டித்தானே டெல்லி செயல்படுகிறது என்று நீங்கள் பெருமையோடு பேசலாம் அல்லவா ? 

இறுதியாக எனக்கு ஒரே ஒரு ஐயம் - நீங்கள் தலைவராக இருந்து நடத்தும் கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த உங்கள் மாணவர்கள் முடிவு செய்தால், அதில் பாராளுமன்றத் தாக்குதலை சரி என்று கூறி, இந்தியா துண்டாடப்படவேண்டும் என்ற முழக்கங்களை எழுப்ப விரும்பினால்  உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? 
கருத்து சுதந்திரம் என்ற நிலையில் அனுமதிப்பீர்களா அல்லது உங்கள் தேசபக்தி என்ற நிலையில் மறுப்பீர்களா ? உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறலாமா ? 

அன்புடன் 
இராமச்சந்திரன்