வெள்ளி, 27 மார்ச், 2015

அவசரக்காலத் தேவைகளுக்கு

தனி மனிதனின் பொருளாதாரக் கனவு என்பது நான்கு அடுக்குகளைக் கொண்டது. ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் முதல் இரண்டு அடுக்குகள் என்றால், அவசரத் தேவைக்கான பணமும், சரியான முதலீடுகளும் அடுத்த அடுக்குகளாக ஆகும்.

இன்றைய நிலையில் நம்மில் யாருடைய வேலையும் நிரந்தரமானது இல்லை. தென்னைமரத்தில் தேள் கொட்டினால், இப்போது நிச்சயமாக பனைமரத்தில் நெறிகட்டுகிறது. உலகில் எங்கோ நடக்கும் எதோ ஒரு நிகழ்ச்சி, வேறு எதோ இடத்தில எதிரொலிக்கிறது. எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வேலை போய்விடும் சாத்தியக்கூறு எல்லார் வாழ்க்கையிலும் பிரிக்கமுடியாத உண்மையாக ஆகிவிட்டது.

இந்த நேரத்தில், அப்படி ஏதாவது ஒரு பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள போதுமான பணம் கைவசம் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஆறுமாத செலவுகளை சமாளிக்கும் அளவில் கைவசம் பணம் இருக்க வேண்டும் என்று பொருளாதார விற்ப்பனர்கள் கருத்து சொல்கிறார்கள்.

இந்த அவசரகால பணம் என்பது உங்கள் செலவுகளை ஆறுமாதம் சமாளிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும், உங்களது ஆறுமாத வருமானமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஒரு மாதத்திற்கான மிக அவசியமான செலவுகள் என்னவெலாம் என்பதைக் எழுதிப் பாருங்கள். நம் தேவைகள் ஒன்றாகவும் நமது ஆசைகளும் விருப்பங்களும் (needs & wants/desires) வேறொன்றாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பணம் என்பது தேவைப்படும் போது உடனே கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும். இந்தப் பணத்தை எந்த விதமான நிலையிலும் இழப்பை ஏற்ப்படுதாத வகையில் சேமிக்கப்பட வேண்டும். இந்தச் சேமிப்பில் மிகப் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம்.

பொதுவாக இந்த அவசரகால தேவைக்கான பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கிலோ அல்லது குறுகிய கால வைப்புத் திட்டங்களிலோ (Short Term Deposit) வைத்து இருக்கலாம். இந்த வகையில் எப்போது தேவையோ அப்போது இந்தப் பணத்தை திரும்பிப் பெற எளிதாக இருக்கும்.

1. உங்கள் ஆறுமாத அத்தியாவசியத் தேவைகள் எவையெல்லாம் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
2. சிறிய அளவிலாவது அந்தக் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பியுங்கள்.
3. குறிப்பிட்ட கால அளவில் அந்தப் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
4. அந்த இலக்கை எட்டும்வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
5. உங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை, மற்றும் வருமான வரித்துறையில் இருந்து திரும்பி வரும் தொகை போன்றவற்றை இந்த சேமிப்பில் செலுத்துங்கள்.
6. எந்தவிதமான பிரச்னையும் வராத முழுவதும் பாதுகாப்பான இடத்தில இந்த சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

இதுவரை இல்லை என்றால் உடனே செயல்படுத்தத் தொடங்குங்கள்.