புதன், 8 ஏப்ரல், 2015

புதையலா இல்லை புதைகுழியா ?

சென்ற ஆண்டு 2014 ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 22,446. ஒரு வருடம் கழிந்து 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அன்று குறியீட்டு எண் இருபத்தி ஐந்து சதவிகிதம் உயர்ந்து 28,260 ஆக இருக்கிறது.

இதே காலகட்டத்தில் Ashok Leyland நிறுவனத்தின் பங்குகள் 227% வளர்ச்சியையும், Britannia நிறுவனம் 158% வளர்ச்சியையும், Jet Airways நிறுவனம் 100% வளர்ச்சியையும் கண்டுள்ளது. மிக அதிகமாக வளர்ச்சி அடைந்த பங்குகள் பற்றிய விவரம் இங்கே.  

என்ன, பங்குச் சந்தையில் முதலீட்டை ஆரம்பிக்கலாமா என்று எண்ணுகிறீர்களா ? கொஞ்சம் பொறுங்கள். இதே காலகட்டத்தில் Reliance Communications நிறுவனத்தின் பங்குகள் 127 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகக் குறைந்து உள்ளது. Tata Steel நிறுவனத்தின் பங்குகள் 401 ரூபாயில் இருந்து 324ஆகவும், Indian Overseas Bank பங்குகள் ஐம்பது ரூபாயில் இருந்து நாற்பத்தி இரண்டு ரூபாயாகவும் குறைந்து இருக்கிறது. சந்தையின் குறியீட்டு எண் வளர்ச்சி காணும் போது இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து இருக்கிறது. ஆக, சந்தையின் குறியீட்டு எண் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு தனிப்பட்ட பங்குகளின் விலையை நாம் நிர்ணயிக்க முடியாது. இதே காலகட்டத்தில் விலை குறைந்த பங்குகள் பற்றிய விவரம் இங்கே. 

பங்குகளின் விலை மாற்றம் அடைய பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். பங்குகளின் விலை என்பது அந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, லாபத்தில் வளர்ச்சி இவைகளைப் பொறுத்தே அமையும். வருங்காலத்தில் நிறுவனம் வளர்ச்சிபாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் பங்குகள் விலை கூடும். நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் அல்லது வழங்கும் சேவைகள், அதற்க்கான சந்தை, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அரசின் கொள்கை முடிவுகள், உலகளாவிய போட்டி, மாறிவரும் தேவைகள் இவைகள் எல்லாம் நிறுவனத்தைப் பாதிப்பதைப் போலவே பங்குகளின் விலையையும் பாதிக்கும். உதாரணமாக உலகம் முழுவதும் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருள்கள் விற்பனைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. இந்திய அளவில் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கு விளம்பரம் செய்யவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடுகள் உள்ளன. இது துறை சார்ந்த சவால்கள்.




இதுபோல காலமாற்றத்தில் பல பொருள்களின் தேவை என்பது இல்லாமலே ஆகிவிடும். உதாரணமாக தட்டச்சு இயந்திரம், கணினிகள் பயன்பாடு அதிகரித்தால் இல்லாமலே ஆகிவிட்டது. சற்றே யோசித்துப் பாருங்கள், கடந்த ஐந்து அல்லது பத்து வருடகாலத்தில் உங்கள் பகுதியில் பல பழைய தொழில் நிறுவனங்கள் காணாமல்போய், அங்கே புது நிறுவனங்கள் வந்து இருக்கிறது அல்லவா. இது போலப் பெரிய நிறுவனங்கள் இல்லாமல் ஆகி, பல சிறிய நிறுவங்கள் வளர்ந்து பெரும் நிறுவனங்களாக மாறி இருக்கிறது. உதாரணமாக இன்று நாம் காணும் மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு உள்ளாகத் தொடங்கப்பட்டதுதான். மாறிவரும் உலகில் மாற்றத்தை சரியாக எதிர்கொண்டு மாறாத நிறுவனங்கள் காணாமல் ஆவது தவிர்கமுடியாத நிகழ்வே ஆகும்.

இந்த மாற்றங்கள், சவால்கள் இவைகளைப் பலரால்  அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடியும். ஆனால் புரியாத சில சுழல்களும் பங்குச் சந்தையில் உண்டு. முதலீடு செய்யும் பொதுமக்களின் பேராசையையும், சரிதான புரிதல் இன்மையையும் பயன்படுத்தி சந்தையின் போக்கை மாற்றும் திமிங்கிலங்களும் பங்குச்சந்தையில் அவ்வப்போது தென்படுவதுண்டு. 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாத இறுதிக்கும் சந்தையின் குறியீட்டு எண் 2000இல் இருந்து 4000என இருமடங்கு உயர்ந்தது. 

அப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருந்த திரு நரசிம்மராவ் அவர்கள் அரசு அறிமுகப்படுத்திய உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் என்ற  புதிய பொருளாதாரக் கொள்கைகளால் இந்த வளர்ச்சி இருந்தது என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்குப் பின் இருந்தது ஒரு தனி மனிதன். அவர் பெயர் ஹர்ஷத் மேத்தா. 


வங்கிகளில் உள்ள பணத்தை சந்தைக்குத் திருப்பிவிட்டு வரலாறு காணாத அளவில் சந்தையின் மதிப்பை அவர் உயர்த்தினார். பங்கு வர்த்தகம் பற்றித் தெரியாத பலர் அப்போது பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். ஆனால் இதைப் பல காலம் தொடர்ந்து அவரால் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டு சிறைப்பட்டு அங்கேயே இறக்கவும் செய்தார். எப்படி இருந்தாலும் ஹர்ஷத் மேத்தா பெயரைச் சொல்லாமல், இந்தியப் பங்குச் சந்தையைப் பற்றி பேச முடியாது. அவர் கைவண்ணத்தால் 1992இல் 400ஐத் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் அடுத்த ஆயிரத்தைத் தொட எழு வருடங்கள் ஆனது. அந்த அளவு மக்கள் சந்தையை விட்டு விலகி இருந்தனர். 

அது 2009ஆம் ஆண்டு. இந்தியாவின் பெரும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்கராஜு அவரது நிறுவனம் தாக்கல் செய்த கணக்குகள் உண்மையானவை இல்லை என்று ஒத்துக்கொண்டார். உடனடியாக அந்த நிறுவனத்தின் பங்குவிலை சரிந்தது, அதோடு கூடவே சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளும் குறைந்தன. 


ராஜு கைதுசெய்யப்பட்டார், சத்தியம் நிறுவனத்தை மகேந்திரா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இன்று அந்த நிறுவனம் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. 

சிறிதும் பெரிதுமான பங்குச்சந்தை ஊழல்கள் இதுபோலப் பல கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் காவலாளியைவிட கள்ளனே திறமையானவனாக இருக்கிறான். 

பங்குவர்த்தகத்தை முறைப்படுத்த SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA என்ற அமைப்பை அரசாங்கம் உருவாக்கியது. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி உடன் இணைந்து இந்தியப் பங்குச் சந்தைகளை செபி கண்காணித்து வருகிறது. 


மிக அதிகமாக வளர்ச்சி கிட்டும் முதலீடு என்று சொல்லிவிட்டு உடனேயே சந்தையில் நடக்கும் ஊழல்கள் பற்றி ஏன் பேசுகிறோம் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா. நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன என்பதற்காக நாம் சாலைகளில் பயணம் செய்யாமல் முடங்கிவிடுவது இல்லை, அதுபோல்தான் நாம் பயணம் செய்ய இருக்கும் பொருளாதாரப் பாதையில் உள்ள சிக்கல்களை சிறிது எடுத்துக் கூறினேன். ஆனால் இவைகளைத் தாண்டிதான் நாம் பயணிக்க வேண்டும். ஆனால் கூடியவரை சிக்கல் இல்லாமல் பயணிக்கவேண்டும், அதற்கு என்ன செய்யலாம் ? 

வாருங்கள் பயணிப்போம். 

தொடர்புடைய பதிவுகள் 

திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 





சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.



1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்   

சனி, 4 ஏப்ரல், 2015

விதி எண் 72


முதலீட்டுக்கான வாய்ப்புகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு வேறு சில விசயங்களைப் பற்றிப் பார்ப்போம். நம் அனைவருக்கும் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்ற ஆசை கட்டாயமாக இருக்கும். அதற்க்கு நமக்கு பணம் வளர்ச்சி அடையும் வேகத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும்.

பள்ளி நாட்களில் நாம் சாதாரன வட்டி மற்றும் கூட்டு வட்டி பற்றி படித்து இருப்போம். கூட்டு வட்டி என்பது வட்டிக்கு மேல்கிடைக்கும் வட்டி ஆகும். கூட்டுவட்டி முறையில் பணம் வளரும் வேகம் மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக பத்தாயிரம் ரூபாய் 12% வட்டி விகிதத்தில் வளர்ச்சி அடைந்தால் ஆறு வருடத்தில் ( 1,200 * 6) சாதாரண வட்டி முறையில் நமக்கு Rs 7,200/- கிடைக்கும். அதுவே கூட்டுவட்டி என்றால் Rs 9,738/-  கிடைக்கும்.


அதாவது கூட்டுவட்டி முறையில் ஆண்டு ஒன்றிற்கு 12% வளர்ச்சி அடைந்தது என்றல் உங்கள் பணம் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும். ஒரு முறை முதலீடு செய்துவிட்டு, அந்தப் பணத்தை எடுக்காமல், வட்டியையும் மறுமுதலீடு செய்து அதில் கிடைக்கும் வளர்ச்சி செய்தால் கிடைக்கும் வளர்ச்சி பற்றி இங்கே பார்த்தோம்.

ஆனால் ஆறு வருடங்கள் ஆண்டு ஒன்றிக்கு பத்தாயிரம் ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்து அந்தப் பணம் 12% வளர்ச்சி அடைந்தால், ஆறு வருட முடிவில் என்ன கிடைக்கும் என்றால்


அதாவது நீங்கள் முதலீடு செய்த பணம் அறுபதாயிரம் ரூபாய்கள், ஆனால் ஆறு வருட முடிவில் உங்களுக்கு அது தொண்ணூறாயிரம் ரூபாயாகப் பெருகி இருக்கும்.

அது என்ன விதி எண் 72 ?
அது உங்கள் பணம் வளரும் வேகத்தைக் குறிக்கும் எண். உதாரணமாக உங்கள் முதலீடு வருடம் ஒன்றிக்கு 8% வளர்ச்சி காணுகிறது என்றால், அது இரட்டிப்பாகும் காலம்

                         விதி எண்             72
                          -------------   =        -------   =     9 வருடங்கள்.
                         வளர்ச்சி                8

அது போல உங்கள் பணம் நான்கு வருடத்தில் இரட்டிப்பாக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்குத் தேவையான வளர்ச்சி

                   விதி எண்             72
                   ----------------  =       ----   = 18 சதவிகிதம்
                   வருடம்                 4


உதாரணமாக உங்களால் மாதம் 2,500/- ரூபாய் சேமிக்க முடியும் என்று எடுத்துக் கொள்ளவோம். அதை முழுவதும் பாதுகாக்கப் பட்ட தேசியமயமாகிய வங்கியில் 7% வளர்ச்சியில் சேமிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சேமிப்பை நீங்கள் வேலை செய்யும் காலம் முழுவதும் தொடர்ந்தால், அதாவது முப்பது வருடம் முறையாகச் சேமித்தால் உங்கள் சேமிப்பு என்பது ரூபாய் ஒன்பது லட்சமாக இருக்கும். சரிதானே. அப்போது முப்பது வருட முடிவில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்று நினைகிறீர்கள் ?

உங்களிடம் முப்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். நம்ம முடியவில்லை அல்லவா ? இதைப் பாருங்கள்






நாட்கள் செல்லச் செல்ல உங்கள் பணம் பெருகும் வேகம் அதிகரிப்பதைப் பாருங்கள். ரோமாபுரி நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை நண்பர்களே. எல்லா மிகப் பெரும் சாதனைகளுக்கும் தேவை கடின உழைப்பு, அளவற்ற பொறுமை. போதுமான கால அளவும், சரியான முதலீட்டைக் கண்டுகொள்ளும் திறனும் இருந்தால் நீங்களும் கோடிஸ்வரன் ஆகலாம். பணம் சம்பாதிப்பது என்பது ஓன்று, அதனைப் பாதுகாத்துப் பெருக்குவது என்பது வேறொன்று என்பதை மறக்கவேண்டாம்.

இதே முப்பதாயிரம் ரூபாய் வருடம்தோறும் 12 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றால் முப்பது வருட முடிவில் உங்கள்வசம் எண்பதுலட்ச ரூபாய்கள் இருக்கும்.






இப்போது மாதம் ஒன்றிற்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் எட்டாயிரம் ரூபாய் வெவ்வேறு அளவில் வளர்ச்சி அடைந்தால் முப்பது வருட முடிவில் உங்கள் வசம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம்.



ஆக, சில கோடி ரூபாய்களை கைவசமாக்குவது என்பது இயலாத விஷயம் இல்லை. முடிந்த அளவு சேமிப்பு, அதுவும் தொடர்ச்சியான சேமிப்பு, நீண்ட கால அளவு காத்திருக்கும் பொறுமை இருந்தால் உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

எப்போது சேமிக்கத் தொடங்கப் போகிறீர்கள் ?
இன்றே இப்போதே என்பதுதான் பதிலா ?

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்புகள்
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம்   

வியாழன், 2 ஏப்ரல், 2015

முதலீட்டுக்கான சில வாய்புகள்

சரியான அளவில் ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் செய்து கொண்டு, அவசரக்கால தேவைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கான தொகையையும் பாதுகாப்பாக சேமித்துவைத்து விட்டீர்கள். அதனைத்தாண்டியும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் சேமிக்க முடியும், அதனை சரியாக முதலீடு செய்ய நினைகிறீர் என்றால் வாருங்கள் உங்களுக்காகத்தான் இந்தத் தொடர்.

இது நீங்கள் சம்பாதித்த பணம், அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருப்பீர்கள். ஆகவே மற்ற எவரைக்காட்டிலும் அந்தப் பணத்தை பாதுகாப்பதில் உங்களுக்குத்தான் கவனம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமாக இந்தப் பதிவு முதலீட்டுக்கான ஒரு ஆரம்பநிலை தகவல்கள்தானே தவிர உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இங்கே பதில் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாது. உங்கள் தேடல்கள்தான் உங்களுக்கான பாதையை உருவாக்கிகொடுக்கும்.

சேமிப்பு, முதலீடு இவைகளுக்கான வேறுபாடுகளை நாம் ஏற்க்கனவே பார்த்தோம் அல்லவா. உங்கள் சேமிப்பை பணமாகவோ இல்லை தங்க நாணயங்களாகவோ மாற்றி உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பது சேமிப்பு. திருட்டுப் போவதைத்தவிர இந்த சேமிப்பு உங்களை விட்டுப் போகும் அபாயம் வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து இருக்கும் பணம் பொதுவாக வளர்ச்சி அடையாது. அதனால் நாம் இங்கே இதுபோன்ற சேமிப்புகளைப் பற்றி இல்லாது, வளர்ச்சி அடையும் முதலீடு பற்றிதான் பேசப் போகிறோம். ஆனால் வளர்ச்சி விகிதம் கூடும்போது பணத்தை இழக்கும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு இருக்கும் முதலீட்டுக்கான சில வாய்புகள் என்ன என்று பார்த்தோம் என்றால்


1. வங்கி நிரந்தர வைப்புக் கணக்கு ( Fixed Deposit in Banks )
2. நிதி நிறுவங்களின் வைப்புக் கணக்கு ( Non Banking Finance Company - Deposits )
3. சீட்டு நிறுவனங்கள் ( Chit Funds )
4. தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு ( Investment in other commercial business )
5. தங்க நகைகள், தங்க நாணயங்கள் ( Gold Coins, Ornaments )
6. நிலம், வீடு, விவசாய நிலம் ( Land and Property )
7. பங்குச் சந்தை ( Share Market )
8. பரஸ்பர நிதித் திட்டங்கள் ( Mutual Funds )
9. கலைப் பொருள்கள் ( Art Collections )

இவைகளில் வங்கிகளில் நீண்டகால வைப்புக் கணக்கில் அநேகமாகப் பணம் பறிபோகும் வாய்ப்பு இல்லை, ஆனால் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். தேவைப்படும் போது மிகக் குறைந்த காலத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வங்கிகளைக் காட்டிலும் வட்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். இந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். குறுகியகாலத்தில் பணத்தைப் பெறுவது கொஞ்சம் கடினம்.

சிட்டு நிறுவனங்கள் குறுகிய கால சேமிப்பு என்ற பார்வையில் சிறந்தவை, ஆனால் அதிகம் நெறிமுறைப்படுத்தப் படாத தொழில். இழப்பின் வாய்ப்பு அதிகம்.

தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களின் தொழிலில் முதலீடு செய்வது வருமானம் அதிகம் வரும் ஆனால் இழப்பின் வாய்ப்பு மிக அதிகம். கவனம் தேவை.

தங்க நகைகள், தங்க நாணயங்கள் - அநேகமாக மனித சமுதாயம் தொடங்கிய உடனே ஆரம்பித்த சேமிப்பு. நம் எல்லோருக்கும் மனம் கவர்ந்த சேமிப்பு. உடனடியாக விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் செல்லக்கூடிய பொருள். ஆனால் சேமிப்பு என்றால் நகையைக் காட்டிலும் தங்க நாணயங்கள் இன்னும் மேல். நகைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கூலி சேதாரம் என்று இழக்க நேரிடும். பொது ஆண்டு 2000க்குப் பின்னர் அதிகமாக விலை ஏறியது. ஆனால் நீண்ட கால நோக்கில் லாபகரமான முதலீடாக வல்லுனர்கள் பரிந்துரை செய்வதில்லை.

நிலத்தில் சேமிக்க கைவசம் மிக அதிகமான பணம் வேண்டும். விற்பனை செய்வது கடினம். உடனடியாகப் பணமாக மாற்றமுடியாது. சட்டச் சிக்கல்களும், காப்பாற்றக் கடினமானதும் கூட.

பங்குக்சந்தை நீண்ட கால நோக்கில் மிக அதிகமான வருமானத்தைத் தரக்கூடியது. ஆனால் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளையும், அவர்கள் நடத்தும் தொழிலின் சர்வதேச மாற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்துவர வேண்டும். நிபுணர்கள் துணை அவசியம். உங்கள் முதலீட்டை இழக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் - பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மிகச் சிறந்த வழி. நிறுவனங்களின் நிபுணர்கள் வழிகாட்டலில் முதலீடு நடப்பதால் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பானது. தொடர்ச்சியான நீண்டகால முதலீடிற்கு சிறந்த வழி. முதலீட்டை இழக்கும் வாய்ப்பு நேரடியான முதலீட்டை விடக் குறைவு.

கலைப் பொருள்களில் முதலீடு செய்வது இன்னும் இந்தியாவில் வளர்ச்சி அடையாத துறை. சரியான, உண்மையான கலைப் பொருள்களைக் கண்டு அறியப் பயிற்சி தேவை. போலிகள் பல நடமாடும் துறை. சாதாரண முதலீட்டாளர்கள் இதனைத் தவிர்த்து விடுவது நலம்.

உதாரணமாக அஞ்சல் துறை சேமிப்பு, காப்பீட்டில் சேமிப்பு என்று, இங்கே கூறியதைத் தாண்டியும் முதலீடு செய்யப் பல வழிகள் இருக்கலாம்.  நாம் இங்கே பொதுவாக மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கும் துறைகளைப் பற்றித்தான் பேசி இருக்கிறோம்.

ஓரளவிற்கு பல்வேறு சேமிப்புக்கான வழிகளையும், அதில் உள்ள சாதக பாதகங்களையும் இப்போது நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்பட்டு கைவசம் இருக்கும் பணத்தை இழந்து விடாதீர்கள். அதுபோல உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல், பல்வேறு இடங்களில் பரவலாக்குங்கள். வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்யும்போது பணம் பறிபோகும் வாய்ப்பு மிகவாகக் குறைகிறது.



உங்களின் ஆசைகளைக் கனவுகளை இப்போது வரிசைப்படுத்தி எழுதுங்கள். இன்றிலிருந்து எந்த காலகட்டதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்கிடுங்கள். உதாரணமாக நீங்கள் வசிக்க ஒரு வீடு வாங்க எண்ணினால், எந்த வருடம் வாங்கப் போகிறீர்கள், அதற்க்கு எத்தனை பணம் தேவைப் படும் என்று யோசியுங்கள். உங்கள் குழைந்தைகளின் மேற்ப்படிப்பு, அவர்கள் திருமணம் இவைகளுக்கு எந்த வருடம் எவ்வளவு தேவைப்படும், உங்களுக்கான ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு தேவைப்படும் என்பதை எழுதிப் பார்த்தல், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்ல நினைக்கிறீர்கள், அதற்க்கான கால அவகாசம் உங்களிடம் எவ்வளவு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்போது நீங்க செல்ல நினைக்கும் இடத்திற்கு எப்படிப் போவது, அதற்க்கு எங்கே சேமிப்பது சரியாக இருக்கும் என்பதை மிக எளிதாகத் திட்டம் இட்டுவிடலாம்.


தொடர்புடைய பதிவுகள் 

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை 
பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்காலத் தேவைகளுக்கு