செவ்வாய், 31 மார்ச், 2015

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை

சேமிப்புக்கான முதல் விதி என்ன என்றால் ஒருபோதும் வருமானத்திற்கு மேலாகச் செலவு செய்யக்கூடாது என்பதுதான். வரவு எட்டணா ஆனால் செலவு பத்தணா என்றால் கடைசியில் துந்தணாதான். நம்மில் பலருக்கு வருமானம் என்பது நிலையானதாகவே இருக்கும், ஆனால் செலவுகள்தான் நிலையானதாக இருக்காது.

நமது செலவுகளை திட்டமிட்ட செலவுகள் என்றும் திட்டமிடாக திடீர் செலவுகள் என்றும் பிரிக்கலாம். வீட்டு வாடகை அலது வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, நாம் பயன்படுத்தும் வண்டிக்கான தவணை, அதற்கான எரிபொருள், பராமரிப்புச் செலவு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாரதிர்க்கான கட்டணம், குழந்தைகளுக்கான கல்விக்கான செலவு, பால், அரிசி, மலிகைச்சாமான்கள் இன்னபிற உணவுப் பொருள்களுக்கான தேவை என்பவை திட்டமிட்டச் செலவுகளில் அடங்கும்.

எதிர்பாராமல் வரும் உடல்நலக் குறைவு, சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ள கைபேசி, தொலைகாட்சி ஆகியவற்றை வாங்குவது இவை எல்லாம் திட்டமிடாத செலவுகளில் வரும். உறவினர்கள் வீட்டு விசேச நிகழ்சிகள், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இதற்க்கான செலவுகள் ஒரு தனி அணியாக இருக்கும்.

சேமிப்பு என்றால் சாதாரணமாக நாம் அனுபவிக்கவேண்டிய விசயங்களைக் கூட அனுபவிக்காமல் கஞ்சத்தனமாக இருப்பது இல்லை. ஆனால் தேவைற்ற செலவுகளைக் குறைப்பதும் முடிந்தால் அவற்றை அறவே நிறுத்துவதும்தான் வாழ்கையை வாழும் வழி. வாழ்க்கை என்பது ஒருமுறைதான் நமக்குக் கிடைப்பது, அதை முறையோடு அனுபவிக்காமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களைப் பற்றி ஔவை

பாடுபட்டுத் தேடித் பணத்தைப் புதைந்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு 
ஆவிதான் போனபின்பு யாரோ அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம் ?  
என்று வினவுகிறார்.


ஆனால் அதே நேரத்தில் முதலுக்குமேல் செலவு செய்தால் என்ன நடக்கும் என்றால்
ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை 
எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு 

ஆகவே, உங்கள் செலவுக் கணக்கை முறையாக எழுத ஆரம்பியுங்கள். எழுதிப் பார்க்கும்போது எவை எல்லாம் தேவையான செலவுகள், எவை எல்லாம் தேவையற்ற தவிர்க்கக்கூடிய செலவுகள் என்பதனை நாம் கண்டுகொள்ள முடியும். சந்தையில் கிடைக்கும் பொருள்களில் பல நமக்கு தேவை இல்லாத பொருள்களே. எந்தப் பொருளை வாங்குமுன்பும் ஒருமுறைக்கு இருமுறை அந்தப் பொருள் நமக்குத் தேவைதான என்பதை யோசித்துப் பாருங்கள். 75% தள்ளுப்படி, அடக்கவிலைக்கே விற்பனை, ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் என்ற விளம்பரங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை தங்கள்வசம் இழுக்க விற்பனையாளர்கள் கையாளும் யுக்தி. அதில் மயங்கி தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள்.

கடன் அட்டையை உபயோகப்படுத்தி, அதையும் தவணை முறையில் அல்லது குறைந்த அளவிலான பணத்தைச் செலுத்துவது என்பது மீளமுடியாத குழியில் விழுவதற்குச் சமம். குறிப்பிட்ட காலஅளவை தாண்டினால் கடன் அட்டைகளின் வட்டிவிகிதம் ஏறத்தாழ 30% மேல் போகும்.

உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை விட  பலரிடம் அதிகமான பொருள்கள் இருக்கும். உங்களிடம் எவ்வளவு குறைவாக இருந்தாலும்  பலரிடம் அதனைவிட குறைவான பொருள்களே  இருக்கும்.  ஒருபோதும் மற்றவர்களைப் பார்த்தோ அல்லது பிறர் உங்களைப் புகழவேண்டும் என்றோ தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள். மற்றவர்களுக்காக பகட்டாகக் காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்க்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருள்களை வாங்காமல் இருந்தால் அதுவும் சேமிப்புதான்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

தொடர்புடைய பதிவுகள் 
பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்கால தேவைகளுக்கு   

ஞாயிறு, 29 மார்ச், 2015

பணவீக்கவிகிதம் - ஒரு எளிய அறிமுகம்

இதுவரை நாம் சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதைப் பற்றியும், மருத்துவக் காப்பீடு பற்றியும், அவசரத் தேவைக்கு தேவைப்படும் அளவிற்கு பணத்தைத் தனியாக வைத்துக் கொள்வது பற்றிப் பார்த்தோம்.

இதை எல்லாம் சரியாக முடித்த பின்னரே நாம் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். நம்மில் பலர் முதலீட்டையும் சேமிப்பையும் ஓன்று என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சேமிப்பு என்பது பணத்தைச் சேகரித்து அதனைப் பாதுகாப்பாக வைத்து இருப்பது. ஆனால் முதலீடு என்பது அப்படிச் சேமித்த தொகையில் இருந்து வருமானம் வரும் வகையில் சரியாகப் பயன்படுத்தும் வழியாகும். பொதுவாக சேமிப்பு என்று வரும் போது அதில் பணத்தை இழக்கும் சந்தர்ப்பம் இருக்காது. ஆனால் முதலீடு என்று வரும்போது, பணத்தை இழக்கும் வாய்ப்பு உண்டு. பணத்தை முதலீடு செய்யும் போது அதிக வருமானம் என்றால் இழக்கும் வாய்ப்பு அதிகமாகவும், வருமானம் குறையும் போது இழக்கும் வாய்ப்பு குறைவாகவும் இருக்கும்.

இதுபோக, சேமிப்போ அல்லது முதலீடோ பணவீக்க விகிதத்தைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும். பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்துக் கொண்டு நாம் வாங்கும் பொருளின் அளவு. உதாரணமாக 1985ல் ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் 2015ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் அறுபத்தி இரண்டு ரூபாய் கொடுக்கிறோம். அதாவது ஒரே பொருளுக்கு ஏறத்தாழ எட்டு மடங்குக்கு மேலே நாம் இன்று செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது அந்த அளவிற்கு இந்திய ரூபாய் தனது வாங்கும் சக்தியை இழந்து உள்ளது என்று பொருள்.

வல்லுனர்கள் கணிப்பின்படி இந்தியாவில் பணவீக்க விகிதம் என்பது எட்டு சதவிகித அளவில் இருக்கிறது. அப்படி என்றால் சென்ற வருடம் நீங்கள் நூறு ரூபாய் செலவில் வாங்கிய பொருளுக்கு இன்று நூற்றி எட்டு ரூபாய் செலவு செய்யவேண்டி இருக்கும். விலைவாசி அதிகரித்துவிட்டது என்று நாம் பேசுவது இந்தப் பணவீக்க விகிதத்தைப் பற்றிதான்.

பணவீக்கவிகிதம் எட்டு சதவிகிதம் என்றால் எல்லாப் பொருள்களும் ஒரே போன்று விலை ஏறியிருக்க வேண்டியது இல்லை. காய்கறிகள் ஐந்து சதவிகிதமும், உணவுப் பொருள்கள் பத்து சதவிகிதமும், வாடகை பதினைந்து சகவிகிதமும் கூடி, இது போன்று சராசரியாக எட்டு சதவிகிதம் என்று ஆகி இருக்கலாம்.

மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைத்து இந்தப் பணவீக்க விகிதம் மிகப் பெரிய அளவில் கூடாமலும் குறையாமலும் இருக்கும் வழிகளைக் கையாண்டு வருகின்றன. வங்கிகளில் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதின் மூலமும், சந்தையில் புழங்கும் பணத்தின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்க விகிதத்தை அவை சமன் செய்கின்றன.

சேமிப்போ அல்லது முதலீடோ, உங்கள் பணம் வளர்ச்சி அடையும்  அளவு என்பது இந்தப் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உண்மையில் உங்கள் கைவசம் இருக்கும் பணம் அதன் மதிப்பை இழந்துகொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சமாக  ஆரம்பநிலைப் பொருளாதார தகவல்களைப் பற்றிய புரிதல்களை கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சேமிப்பு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வளர்ச்சி காண்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


தொடர்புடைய பதிவுகள் 

அவசரக்காலத் தேவைகளுக்கு 
நினைவில் வைக்க 

வெள்ளி, 27 மார்ச், 2015

அவசரக்காலத் தேவைகளுக்கு

தனி மனிதனின் பொருளாதாரக் கனவு என்பது நான்கு அடுக்குகளைக் கொண்டது. ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் முதல் இரண்டு அடுக்குகள் என்றால், அவசரத் தேவைக்கான பணமும், சரியான முதலீடுகளும் அடுத்த அடுக்குகளாக ஆகும்.

இன்றைய நிலையில் நம்மில் யாருடைய வேலையும் நிரந்தரமானது இல்லை. தென்னைமரத்தில் தேள் கொட்டினால், இப்போது நிச்சயமாக பனைமரத்தில் நெறிகட்டுகிறது. உலகில் எங்கோ நடக்கும் எதோ ஒரு நிகழ்ச்சி, வேறு எதோ இடத்தில எதிரொலிக்கிறது. எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் வேலை போய்விடும் சாத்தியக்கூறு எல்லார் வாழ்க்கையிலும் பிரிக்கமுடியாத உண்மையாக ஆகிவிட்டது.

இந்த நேரத்தில், அப்படி ஏதாவது ஒரு பிரச்னை வந்தால், அதனை எதிர்கொள்ள போதுமான பணம் கைவசம் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஆறுமாத செலவுகளை சமாளிக்கும் அளவில் கைவசம் பணம் இருக்க வேண்டும் என்று பொருளாதார விற்ப்பனர்கள் கருத்து சொல்கிறார்கள்.

இந்த அவசரகால பணம் என்பது உங்கள் செலவுகளை ஆறுமாதம் சமாளிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும், உங்களது ஆறுமாத வருமானமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களது ஒரு மாதத்திற்கான மிக அவசியமான செலவுகள் என்னவெலாம் என்பதைக் எழுதிப் பாருங்கள். நம் தேவைகள் ஒன்றாகவும் நமது ஆசைகளும் விருப்பங்களும் (needs & wants/desires) வேறொன்றாகவும் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பணம் என்பது தேவைப்படும் போது உடனே கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும். இந்தப் பணத்தை எந்த விதமான நிலையிலும் இழப்பை ஏற்ப்படுதாத வகையில் சேமிக்கப்பட வேண்டும். இந்தச் சேமிப்பில் மிகப் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க வேண்டாம்.

பொதுவாக இந்த அவசரகால தேவைக்கான பணத்தை வங்கியில் சேமிப்புக் கணக்கிலோ அல்லது குறுகிய கால வைப்புத் திட்டங்களிலோ (Short Term Deposit) வைத்து இருக்கலாம். இந்த வகையில் எப்போது தேவையோ அப்போது இந்தப் பணத்தை திரும்பிப் பெற எளிதாக இருக்கும்.

1. உங்கள் ஆறுமாத அத்தியாவசியத் தேவைகள் எவையெல்லாம் என்று நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
2. சிறிய அளவிலாவது அந்தக் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பியுங்கள்.
3. குறிப்பிட்ட கால அளவில் அந்தப் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
4. அந்த இலக்கை எட்டும்வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
5. உங்களுக்குக் கிடைக்கும் ஊக்கத் தொகை, மற்றும் வருமான வரித்துறையில் இருந்து திரும்பி வரும் தொகை போன்றவற்றை இந்த சேமிப்பில் செலுத்துங்கள்.
6. எந்தவிதமான பிரச்னையும் வராத முழுவதும் பாதுகாப்பான இடத்தில இந்த சேமிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.

இதுவரை இல்லை என்றால் உடனே செயல்படுத்தத் தொடங்குங்கள்.   

புதன், 25 மார்ச், 2015

நினைவில் வைக்க

பொருள் சம்பாதிப்பது தவறு என்றோ இல்லை பணத்தைச் சேமிப்பது தவறு என்றோ நான் நினைக்கவில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கு அழிக்கும்
எக்கு அதன் கூரியது இல் ( 759)

மிகத் தெளிவாக வள்ளுவர் செய்க பொருளை என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அந்தப் பொருள் என்பது சரியான வழியில் சம்பாதித்த வருமானமாக இருக்கவேண்டும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் ( 754)

சட்டப்படி சரி என்பதற்கும் அறநெறிக்கு உட்பட்டு என்பதற்கும் மிகச் சிறிய இடைவெளி உண்டு. ஆகவே சட்டப்படி மட்டுமல்லாது தர்மப்படியும் சரியான முறைப்படியே செல்வத்தை உருவாக்கவேண்டும்.

செல்வதைச் சேர்ப்பதற்கான வழிமுறையை அறிவதும், சரியான வழியில் அந்தப் பொருளை ஈட்டுவதும், ஈட்டிய பொருளைக் காப்பதும், அதனைப் பெருக்குவதும் அப்படிச் சேர்த்த பொருளை நல்ல வழியில் செலவு செய்வதும் அரசுக்கு மட்டும் இல்லை, தனிமனிதனுக்கும் ஏற்புடையதுதான்.

இதுவரை நாம் தனிமனிதனின் பொருளாதாரக் குறிக்கோளை நிறைவேற்ற சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்ய வேண்டியதின் அவசியம் பற்றியும், மனித உயிரின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்வது என்பது பற்றியும், மருத்தவக் காப்பீடு செய்வதன் தேவைகளைப் பற்றியும் பார்த்தோம்.

மற்ற எந்த பொருளையோ அல்லது சேவையையோ ஒரு வாடிக்கையாளராக நாம் வாங்குவதற்கும், காப்பீட்டை வாங்குவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்த இரண்டு விற்பனைகளும் 1872 ஆம் வருடத்திய இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படியே நடந்தாலும் ( Indian Contract Act 1872 )  மற்றையப் பரிமாற்றங்கள் எல்லாம் CAVEAT EMPTOR  ( buyer's beware ) அதாவது வாங்குபவர்களின் கவனம் அவசியம் என்ற முறையில் செயல்படுகின்றது. தனக்குத் தேவையான பொருளை அல்லது சேவையை வாங்கும் வாடிக்கையாளர்,  பொருள்களின் சிறப்பை, அதற்க்கான விலையை மற்றும் இதர விசயங்களை சந்தையில் கிடைக்கும் அதே போன்ற பொருளோடு அல்லது சேவையோடு ஒப்பிடு முடிவு எடுத்துக்கொள்ளட்டும் என்ற முறையில் இயங்குகிறது. 

ஆனால் காப்பீடு துறையோ UBERRIMA FIDES  ( at most good faith ) என்ற முறையில் இயங்குகிறது. காப்பீடுத் துறையில் வாடிக்கையாளர் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடை வழங்குகின்றன. எனவே காப்பீடு நிறுவனங்கள் கேட்கும் தகவல்களை முழுமையாக, உண்மையாகத் தரவேண்டிய பொறுப்பு வாடிக்கையாளர்கள் வசமே இருக்கிறது. 

பொதுவாக, காப்பீடு செய்து கொள்ளுபவர் தங்கள் உடல் நிலை பற்றிய முழுமையான தகவல்களையும், புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தகவல்களையும் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல், காப்பீடு நிறுவனத்திற்க்கு அளிக்க வேண்டும். இந்தத் தகவல்களைக் கொண்டே, நிறுவனங்கள் காப்பீடுக்கான தொகையை நிர்ணயம் செய்யும். 

ஆக, நேர்மையான முறையில் பொருளீட்டி, சரியான தகவல்களைக் கொடுத்து, எந்த உண்மைகளையும் மறைக்காமல் காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

உங்கள் பார்வைக்கு :

1. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு ரூ ஐந்து லட்சம் அளவிலான ஆயுள் காப்பீடு (Endowment Plan)  முப்பது வருடத்திற்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 16,100

2. முப்பத்தி ஐந்து வயதான ஆணுக்கு முப்பது வருடத்திற்கான  ஒரு கோடி ரூபாய்க்கான இறப்பு மட்டுக்குமான ( Term Insurance ) காப்பீடுக்கான வருடாந்திரப் பிரிமியம் : Rs 33,600

3. முப்பத்தி ஐந்து வயதான ஆண் மகனைத் தலைவனாகக் கொண்ட குடும்பத்திற்கு ( மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு) ஐந்து லட்ச ரூபாய்க்கான    Floater முறையிலான மருத்துவக் காப்பீடுக்கான  வருடாந்திரப்  பிரிமியம் : Rs 10,600/-

மேற்குறிப்பிட்ட பிரிமியம் தொகைகள் சேவை வரி சேர்க்காமல்.
இவை இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் ( Life Insurance Corporation of India ), ஸ்டார் இன்சூரன்ஸ் கம்பனியின் பிரிமியம் தொகை. 

தொடர்புடைய பதிவுகள்.

செவ்வாய், 24 மார்ச், 2015

மருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்

வருடம் 1990. வரலாற்று காணாத பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கி இருந்தது. இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களுக்கு தருவதற்கு அரசிடம் பணம் இல்லை. அரசின்வசம் இருந்த தங்கத்தை அடகு வைத்து, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அரசு அந்த நிலையைச் சமாளித்து. பொதுவுடைமை, சோசலிசம் என்ற நிலை மாறி, உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைக்கு நாடு தன்னை மாற்றிக் கொண்டது. அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளைப் பற்றி விவாதிக்கும் இடம் இது இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஏற்ப்பட்ட சில மாறுதல்கள் நாம் பேசும் பொருளையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் அதனைப் பற்றி மட்டும் நாம் பேசுவோம்.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து இரண்டு முக்கியமான மாறுதல்கள் ஏறப்பட்டது. ஓன்று கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அநேகமாக இல்லாமல் போனது. திரும்பும் இடமெல்லாம் முதியோர் இல்லங்கள் உருவாக ஆரம்பித்தன. வயதான காலத்தில் தன் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலே போய், உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை உருவாகத் தொடங்கியது.

கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சை என்ற சேவைகளில் இருந்து அரசுகள் மெல்ல மெல்ல வெளியேறி, அங்கே தனியார்கள் உள்ளே வரத்தொடங்கினார்கள். தரமான கல்வியும், தரமான கனிவான மருத்துவச் சேவையும் சாதாரண மக்களுக்கு எட்டாத விசயங்களாக மாறத் தொடங்கின.

இதோடு இணைந்து மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது. நமது பெற்றோர்கள் அநேகமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, அங்கேயே இருபது அல்லது முப்பது வருடங்கள் பணியாற்றி, அங்கேயே ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நம்மில்பலர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனம் விட்டு நிறுவனம் மாறிக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஓய்வுக்கான சேமிப்பு நிதி ( Pension &Provident Fund ) என்பன அநேகமாக இல்லாமலே போய்விடுகிறது. மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையில் ஒரே ஒரு அறுவைச் சிகிச்சை என்பது பல குடும்பங்களைத் தாங்கமுடியாத பொருளாதாரச் சிக்கல்களில் தள்ளிவிடுகின்றது.

மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தொற்றாத பல உடல்நலக்குறைவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட பயணம், வேலையில் உருவாகும் மன அழுத்தம், நேரம் கடந்த உணவு, உணவில் உள்ள ரசாயனங்கள் இவை எல்லாம் இந்தச் சிக்கல்களை இன்னும் விரைவுபடுத்துகின்றன. முப்பது வயது தாண்டிய பலரும் இன்று இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், எலும்பு தேய்மானம் என்ற பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல அலுவலங்கள் தங்கள் ஊழியருக்கு மருத்துவக் காப்பீடைச் செய்து தந்து இருக்கின்றன. ஆனாலும், வேலை மாற்றம் என்று வரும்போது, சேருகின்ற புதிய நிறுவனத்தில் மருத்துவக்காப்பீடு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் நாற்பது வயதிற்கு மேலே உள்ள ஊழியர்களை பணியில் இருந்து அனுப்பிவிட்டு, அந்த இடத்தைப் புதியவர்களை வைத்து நிரப்பும் போக்கும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் கிடைக்கின்ற வேலையை எடுத்துக் கொள்ளவோ அல்லது தனியாகப் பணியாற்றவேண்டிய சூழலோ பலர் இன்று சந்திக்கும் யதார்த்தமாக இருக்கின்றது.

எனவே சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, தனியாக நமக்காக ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலிதனமான இருக்கும். சிறுவயதில் மருத்துவக் காப்பீடு செய்யும்போது, பொதுவாக பெரும் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதால் காப்பீடு அளிக்கப்படுவதில் கேள்விகள் எதுவும் இருக்காது.

இன்றைய நிலையில் மிகச் செலவு வைக்கும் மருத்துவச் சிகிச்சை இதயநோயக்கான சிகிச்சைதான். எனவே அதனைச் சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஐந்துலட்ச ரூபாய் அளவில்லாவது காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

சில காப்பீடு நிறுவனங்கள் FLOATER POLICY என்ற முறையில் காப்பீடு வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவிற்கான மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடைக் குடும்பத்தில் உள்ள யாரும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் இது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக காப்பீடு செய்வதை விட, இந்தத் திட்டம் சிறப்பானது.

இதுவரை மருத்தவக் காப்பீடு செய்துகொள்ளவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்.

தொடர்புடைய  பதிவுகள்
1. ஒரு கோடி ரூபாய்க் கனவு. 
2. காப்பீடு, காப்பீடு, காப்பீடு 
3. ஆயள் காப்பீடு - எது சரியான அளவு ?
4. ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்   

ஞாயிறு, 22 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்

ஆமாம், ஒரு லட்ச ரூபாய் மாத வருமானத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யவேண்டும் என்றால், அதற்கான ப்ரீமியம் எவ்வளவு இருக்கும் ?
உங்கள் வயது முப்பத்தி ஐந்து என்றால், நீங்கள் காப்பீடு செய்யும் காலம் முப்பது வருடங்கள் என்றால் நீங்கள் செலுத்தும் தொகை வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ ஐந்து லட்சம் வரை வரும்.

வருட வருமானம்               : பனிரெண்டு லட்சம்
உங்கள் செலவு                    : முன்றரை லட்சம்
காப்பீடுக்கான தொகை     : ஐந்து லட்சம்.

சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, காப்பீடு செய்ய என்று எடுத்து வைத்துவிட்டால் அப்புறம் எப்படி மற்றச் செலவுகளைச் செய்ய ? கணக்கு இடிக்கிறது இல்லையா. இதைச் சற்றே ஒரு பக்கமாக வைத்து விட்டு காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

பலரிடம் இருந்து பணம் பெற்று, சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்வதுதான் காப்பீடு நிறுவனங்களின் வேலை என்று முன்னர் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த சேவையைச் செய்ய காப்பீடு நிறுவனங்கள் ஆள்களை வேலைக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அதற்கான அலுவலகம், அதற்கான வாடகை, மற்றச் செலவுகள் இவை எல்லாம் இருக்கிறது அல்லவா. இந்தச் செலவுகளை அந்த நிறுவனம் எவ்வாறு ஈடுகட்டும் ? அந்தச் செலவுகளையும் நாம்தான் கொடுக்கிறோம்.

இருபது வருடங்கள் நீங்கள் பணம் கட்டினால், அந்தக் காலம் முடிந்தபின் நீங்கள் கட்டிய பணம் வட்டியோடு திரும்பி வரும் என்றுதானே காப்பீடு நிறுவனத்தின் முகவர்கள் உங்களுக்கு சொல்லிருக்கிறார். உங்களுக்கு மீண்டும் திரும்பி வரும் அந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இருபது வருடங்களுக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்து கொண்டால், நீங்கள் வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறைவாகத்தானே பணம் கட்ட வேண்டி இருக்கும். நீங்கள் வருடாவருடம் அளிக்கும் பணத்திற்கு வட்டியைக் கணக்கிட்டால் நீங்கள் செலுத்தும் தொகை இன்னும் குறைவாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செலுத்தும் தொகை அதிகமாகத்தானே இருக்கிறது. அது ஏன் ?

இங்கேதான் நீங்கள் காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டும் ப்ரீமியம் தொகை மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. காப்பீடுக்கான தொகை
2. நிறுவனத்தின் செலவுகளுக்கான தொகை
3. முதலீடு செய்யப்படும் தொகை.

யாரோ சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை இந்தக் காப்பீடுக்கான தொகையில் இருந்தே நிறுவனங்கள் திருப்பித் தருகின்றன. நிறுவனத்தின் செலவுகள் அதற்காக  ஒதுக்கப் படும் தொகையில் இருந்து செய்யப்படுகிறது.

முதலீடு செய்வதற்காக ஒதுக்கப் படும் தொகையும் அந்த முதலீட்டினால் கிடைக்கும் வருவாயும்தான் காப்பீடு முதிவடையும்போது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. பொருளாதார பயன்பாடு உள்ள ஒரு பொருளுக்கு எந்த வகையில் எல்லாம் இழப்பு வரலாம் என்பதை கணித முறையில் கணிக்கும் வல்லுனர்கள் எந்த அளவு பணம் பெற்றுக் கொண்டால் இழப்பை ஈடுகட்டி, வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால முடிவில் பணம் திருப்பித் தரமுடியும் என்பதை முடிவு செய்கிறார்கள். இந்த வல்லுனர்களுக்கு அக்சோரியல்கள்  என்று பெயர். மிக அதிகமான வருமானம் தரும் துறைகளில் இதுவும் ஓன்று.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை என்றால்
காப்பீடு என்பது எதிர்பாராமல் ஏற்ப்படும் இழப்பை ஈடுசெய்ய மட்டுமே தவிர காப்பீடு என்பது சேமிப்புக்கான வழிமுறை இல்லை.

அநேகமாக ஆயுள் காப்பீடு முகவர்கள் பேசாத ஒரு காப்பீடுத் திட்டம் ஓன்று உள்ளது. முழுவதும் இழப்பை மட்டுமே ஈடு கட்டும் திட்டம் அது. ஆங்கிலத்தில் அதனை TERM INSURANCE என்று சொல்லுவார்கள். நான் என் உயிரை குறிப்பிட்ட தொகைக்கு காப்பீடு, குறிப்பிட்ட கால அளவிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை நான் ப்ரீமியம் செலுத்தி வர வேண்டும். அந்தக் கால அளவிற்கு உள்ளாக நான் உயிர் இழக்க நேர்ந்தால் காப்பீடு நிறுவனம் அந்தப் பணத்தை நான் ஏற்க்கனவே நியமித்து உள்ள என் உறவினருக்கு அளிக்கும். ஆனால் ஒப்பந்த காலம் தாண்டி நான் உயிரோடு இருந்தால் நான் கட்டிய பணம் எதுவும் எனக்குத் திரும்பிக் கிடைக்காது.


ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அல்லவா ?
சரி நமது வண்டிக்கு வருடாவருடம் காப்பீடு செய்கிறோம், ஏதாவது விபத்து நடந்தால் மட்டும்தானே இழப்பீடு கிடைக்கிறது. இல்லை என்றால் நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடுத்த வருட பிரீமியத்தை கட்டத்தானே செய்கிறோம். அப்போது அதே எண்ணத்தை ஏன் ஆயுள் காப்பீடுக்கும் கொண்டு செலுத்தக் கூடாது ?

இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் (Life Insurance Corporation of India) உருவாக்கப்பட்ட போது, அதாவது பல ஆயுள் காப்பீடு நிறுவனங்களை தேசியமயமாக்கி ஒன்றாக இணைத்த போது, பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவித்து, அதை அரசாங்கத்தின் வசம் சேர்த்து, அதனை வைத்து பல்வேறு கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டி இருந்தது. அது போக காப்பீடு செய்துகொண்டவர் இறந்து போனால் அதற்க்கு இழப்பீடு கிடைக்கும் என்பதனை நேரடியாகச் சொல்ல இயலாத நிலை இருந்தது. எனவே ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிறந்த சேமிப்பாக மட்டுமே மக்களிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மாதம் ஒன்றிக்கு ஐம்பதாயிரம் தேவைப் படும் ஒரு குடும்பத்திற்கு, அந்தக் குடும்பத்தின் சம்பாதிக்கும் உறுப்பினர் இழப்பால் பத்து லட்சம் ரூபாய் காப்புத்தொகையாகக் கிடைத்தாலும், அந்தப் பணம் அக்குடும்பத்தின் இரண்டு வருடத்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது.

பொருளாதாரத்தில் சுயசார்ப்பு அடையநினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, சரியான அளவில் தங்களைக் காப்பீடு செய்து கொள்வதுதான். இதனை சிறுவயதில் ( முப்பது வயதிற்கு உள்ளாக) செய்து கொண்டால் ப்ரீமியம் தொகை மிகக் குறைவாகவே இருக்கும்.

மற்றைய அசையும் அசையாச் சொத்துகள் போலல்லாது மனித உயிரின் மதிப்பு வயது ஏற ஏறக் கூடும். உங்கள் வருடவருமானதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்ததுபோல உங்கள் ஆயுள் காப்பீட்டை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வீடு கட்டுவது போன்ற பெரும் முதலீட்டில், பெரிய அளவு கடன் வாங்கும் போது, அந்தக் கடனின் அளவிற்கு தனியாகக் காப்பீடு செய்து கொள்ளுங்கள். 

சனி, 21 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - எது சரியான அளவு ?

ஒரு சமுதாயத்தில் அல்லது  ஒரு குழுவில் உள்ள மிகச் சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை அந்தக் குழுவில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறைதான் காப்பீட்டின் உட்கருத்து.

உதாரணமாக ஒரு கிராமத்தில்  நூறு  வீடுகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீடும் ஆயிரம் ரூபாய் மதிப்பு உடையவை. எதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு  வருடமும் இரண்டு வீடுகள் வசிக்க இயலாமல் போய் விடுகிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது ரூபாய் இரண்டாயிரம். இதனை அந்த நூறு வீட்டின் உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வது என்றால் அவர்கள் அனைவரும் இருபது ரூபாய் பங்களிப்பு செய்தால் போதும் அல்லவா. இப்படிதான் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல மக்களின் பங்களிப்பைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் பணியே காப்பீடு நிறுவனங்களின் பணி.

மனித வாழ்வில் இரண்டு பிரச்சனைகள் வரலாம்.
                       1. மிகச் சிறிய வயதில் ஒருவர் இறக்கநேரிடலாம்
                       2. மிக அதிகமான ஆயுளோடு ஒருவர் உயிர்வாழலாம்.

முதல் நிலையில் அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவி தேவைப்படலாம். இரண்டாவது நிலையில் அவருக்கே வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பணம் தேவைப்படலாம். இதற்கு ஆயுள் காப்பீடு எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்போம்.

அநேகமாக நம் அனைவருக்கும்  ஒரு இரண்டு சக்கர வண்டியோ இல்லை நான்கு சக்கர வண்டியோ வாங்கிய அனுபவம் இருக்கும். அப்போது அந்த வண்டிக்கு காப்பீடு செய்து இருப்போம். அந்தக் காப்பீடு என்பது அந்த வண்டியின் விற்பனை விலைக்கே செய்வோம்.எந்தப் பொருளுக்கும் அதிகபட்சமான காப்பீடு என்பது அதன் விற்பனை விலைதான்.

அப்படி என்றால் மனித உயிருக்கு விலை என்ன ? அதனை எப்படி நிர்ணயம் செய்வது. இந்தக் கேள்விக்கான பதிலை காப்பீடு செய்யப்படும் மனிதரின் வருமானத்தை வைத்து நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

நாம் உரிய முறையில் காப்பீடு செய்து கொண்டு இருக்கிறோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது. இதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உதாரணமாக நான் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் உத்தேசமாக எழுவது சதவிகிதம்தான் என் குடும்பத்திற்கு வந்து சேரும். மீதி உள்ள முப்பது சதவிகிதம் பணம் பொருளீட்ட செலவாகிவிடும். வருமான வரியாகவோ, நான் பணிசெய்யும் நிறுவனத்திற்கு போய் வரும் போக்குவரத்து செலவாகவோ, என் வேலைக்காக நான் அணியும் உடைகள் என்று இந்தப் பணத்தை நான் செலவு செய்து விடுகிறேன்.

ஒரு வேலை நாளை நான் இல்லை என்றால், இந்த எழுவது சதவிகித அளவிலான பணம் என் குடும்பத்திற்கு மாதாமாதம் வரும் என்றால், அவர்கள் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருப்பார்கள் அல்லவா ?

எவ்வளவு ஒரு தொகையை முழுவதும் பாதுகாக்கப் பட்ட முதலீட்டில் இட்டு, அதன் வட்டி வருமானம் இந்த எழுவது சதவிகித வருமானத்தை அளிக்குமோ அந்தத் தொகையே என் உயிரின் மதிப்பாக இருக்க முடியும், அந்த அளவிற்கு நான் ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக

மாத வருமானம்                                     1,00,000
என் செலவுகள்                                           30,000
குடும்பத்திற்கு கிடைப்பது                70,000

இன்றைய நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதம் 8%.

என் குடும்பத்தின் தேவை ஒரு ஆண்டிற்கு       8,40,000
ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் என் குடும்பத்திற்கு என்று வங்கியில் முதலீடாக இருந்தால் இந்த அளவு பணம் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆக, ஏறத்தாழ சரியான அளவிலான ஆயுள் காப்பீடு என்பது  குறைந்தபட்சமாக வருடவருமானத்திற்கு பத்து மடங்கு. ஆனால் உலக அளவில் நோக்கும்போது 8% வருட வட்டி என்பது மிக அதிகம். இது நிச்சயமாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சமாக உங்கள் வருட வருமானத்திற்கு இருபது மடங்கு காப்பீடு தேவை என்று வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

உங்கள் வருட வருமானம் என்ன ?
உங்களின் மொத்த ஆயுள் காப்பீடு எவ்வளவு ?  

வியாழன், 19 மார்ச், 2015

காப்பீடு, காப்பீடு, காப்பீடு

நாள்தோறும் பல மனிதர்கள் இறப்பதைப் பார்த்தபின்னரும், தான் நிரந்தரமாக இருப்போம் என்று மனிதன் எண்ணுவதுதான் உலகின் ஆச்சரியமான விஷயம் 

யக்ஷப்ப்ரச்னம் - மகாபாரதம்


பணத்தை சேமிக்கும் வழியைக் கேட்டால், காப்பீடில் சேர்ந்து செலவழிக்கும் வழியை ஏன் பேச ஆரம்பிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? எப்படி அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டடம் கட்ட முடியாதோ அது போலவே காப்பீடு இல்லாமல் முதலீட்டைப் பற்றி பேச முடியாது.

நீங்கள் சமீபத்தில் எப்போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டீர்கள் ? அப்போது அந்த காப்பீடு நிறுவனத்தின் முகவர் என்ன சொல்லி உங்களிடம் கையெழுத்து வாங்கினார் ?

வரியை சேமிக்கலாம் என்றா ? இல்லை உங்கள் குழந்தையின் பெயரில் காப்பீடு செய்யுங்கள், அந்தக் குழந்தை வளர்ந்து சரியான வயதில் படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க பணம் கிடைக்கும் என்றா ? இல்லை வருடம் ஐந்தாயீரம் வீதம் முதலீடு செய்தால் இருபது வருடங்கள் கழித்து உங்களுக்கு நீங்கள் செலுத்திய ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றா ? வாருங்கள், உங்களுக்காகத்தான் இந்தப் பகுதி.

காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது 
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் 

காப்பீடு நிறுவன முகவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் பாடமே இதுதான். அதனாலே பல முகவர்கள் வாடிக்கையாளர்கள் தலையில் அமர்ந்து காப்பீடை விற்கிறார்கள். 

இறப்பு என்பது உறுதி, ஆனால் அது நமக்கு வரவே வராது என்பது தான் பொதுவாக மனித மனதின் நம்பிக்கை. அதுவும் நீங்கள் இறந்து போனால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று பேச ஆரம்பித்தால், ஒரு சராசரி இந்தியனால் கோபப்படாமல் இந்தப் பேச்சை கேட்கவே முடியாது. 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சராசரி இந்தியனின் ஆயுள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் முப்பதுகளின் மத்தியில், நாற்பதின் ஆரம்பத்தில், ஐம்பதின் அருகில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் வெளி உலகம் தெரியாத மனைவி, படிப்பை முடிக்காத பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் இத்தோடு முடிவையாத கனவுகள் என்று அவர்கள் குடும்பம் சந்திக்கும் சவால்களை நினைத்துப் பாருங்கள். அநேகமாக உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் உறுப்பினராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து போய் இருக்கும் இன்றைய காலகட்டதில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது நண்பர்களே, ஆனால் நாம் சற்றே சுதாரிப்பாக இருப்பதில் தவறு இல்லை அல்லவா. காப்பீட்டின் பல் வேறு வடிவங்களை நாம் சற்றே உற்று நோக்குவோம்.  

புதன், 18 மார்ச், 2015

ஒரு கோடி ரூபாய்க் கனவு


எவ்வளவு பணம் கையில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள் என்று கேட்டால், அநேகமாக ஒரு கோடி ரூபாய் என்ற பதில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கும். 




அப்படி அந்த ஒரு கோடி ரூபாயை எப்படி சேமிப்பது என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கே பதியலாம் என்று நினைக்கிறேன். 

உலகின் மிகப் பெரும் உண்மைகள் எல்லாம் எப்போதும் மிக எளிமையாகவே இருக்கிறது, நாம்தான் அதனை மிகக் கடுமையாக முயன்று கடினமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். சிறுவயதில் நாம் அனைவரும் படித்த ஓன்று தான் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று,  அப்படி சிறுகச் சேமித்து  சரியாக முதலீடு செய்வதைப் பற்றிதான் நாம் இதில் பேசப் போகிறோம். 

மிக நிச்சயமாக பணம் சம்பாதிப்பதைப் பற்றி இதில் எதையும் நாம் பேசப் போவது இல்லை. அதிலும் லாட்டரி அடிப்பதையோ இல்லை முறையற்ற, சட்டத்திற்கு புறம்பான, தார்மீக வழிக்கு மீறிய வழியைப் பற்றி நாம் இதில் பேசப் போவது இல்லை. மல்டி லெவல் மார்கெட்டிங், நிலத்தை வாங்கி விற்பது, அல்லது பகுதி நேர வேலை என்ற எத்தனைப் பற்றியும் நாம் இதில் பேசப்போவது இல்லவே இல்லை.

முறையான வழியில் சம்பாத்தித்து, அதில் குறையில்லாமல் வசதியாக வாழ்ந்து, சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமிப்பது பற்றி, அந்தச் சேமிப்பை முதலீடு செய்வதைப் பற்றி, அந்த முதலீடு செய்வதில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்களைப் பற்றியே இதில் பேசப் போகிறோம்.

பணம் ஒன்றே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் போது, பணம் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். தேவையான அளவிற்கு உலகில் பொருள்களும் வாய்ப்புகளும் நிறைந்து இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நினைவில் கொள்க : இதில் எழுத இருக்கும் விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று ஆகாது. உங்கள் கனவுகள், உங்கள் தேவைகள், உங்கள் முதலீட்டின் மேல் நீங்கள் எதிர்நோக்கும் வட்டி அல்லது வருமானம், அதற்காக நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கும் இடர்கள் (ரிஸ்க்) என்பது எல்லோருக்கும் ஓன்று போலவே இருக்காது. இங்கே ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே இந்தத் தொடரை ஒரு ஆரம்பநிலை வழியாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.